சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் போராட்டம்!

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவு - தியோநகர் மீனவர்கள் நேற்று முன்தினம் (26) இரவிலிருந்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது அவலோன் 

நிறுவனத்தால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது.

மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் குறித்த வீதியானது வேலியால் அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இதனையறிந்த தியோ நகர் மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள், வேலிகளை அகற்றியுள்ளனர்.

இது குறித்து பிரதேச மக்கள் கூறும் போது 'குறித்த பகுதியில் அவலோன் நிறுவனத்தால் சுற்றுலாத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தமது வளங்களை சுரண்டி வருவதாகவும் கூறியிருந்தனர்.

அத்தோடு தமது மீன்பிடிப்படகுகள் வலைகளை உள்ளே வைத்தே வேலைக்கு செல்லும் பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விடயத்தை அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை என்றும் சம்பவ இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பொலிசாரும் உரிய முறையில் தீர்வினை வழங்கவில்லை என்று மக்கள் குற்றம்சாற்றுகின்றனர்.

தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை நிறுவன வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.