கடவுச்சீட்டுகள் உடனடியாக வழங்கஅறிவுறுத்தல்!

கடவுச்சீட்டுகள் உடனடியாக வழங்கஅறிவுறுத்தல்!

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி அறிவுறுத்தல் வழங்கினார்.

புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) ஒக்டோபர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கோருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், அதனால் அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.