சூடுபிடித்த தமிழரசு கட்சி வளாகம் - புதிய தலைவராக எஸ்.ஸ்ரீதரன் தெரிவு

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று நிறைவுபெற்றுள்ளன.

சூடுபிடித்த தமிழரசு கட்சி வளாகம் - புதிய தலைவராக எஸ்.ஸ்ரீதரன் தெரிவு

அந்த வகையில் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பில் 340 வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் 186 வாக்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மகளிர் அணியின் செயலாளர், உப செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு பணிகள் மும்முரமாக இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21.01.2024) நடைபெற்ற குறித்த தேர்தலின் வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.  

அதேவேளை, சில கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையால், தேர்தல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

வரலாற்றில் முதல் தடவை

அத்துடன், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது.  

மேலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.