முல்லைத்தீவு நீதிவான் மனநோய்க்கு மருந்து பெறுகிறார் - சரத் வீரசேகர சபை ஆவேசம்!

குருந்தூர் மலையில் பொங்கல் விழாவை நடத்த முல்லைத்தீவு நீதிவான் அனுமதி வழங்கியதன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் குற்றம்சுமத்தியுள்ளார். 

முல்லைத்தீவு நீதிவான் மனநோய்க்கு மருந்து பெறுகிறார் - சரத் வீரசேகர சபை ஆவேசம்!

தொல்பொருள் என்பது ஒரு நாட்டின் மரபுரிமையாகும். அது தேசிய அடையாளமாக கருதப்படுகிறது. அதனை மாற்ற முயற்சிப்பது ஒரு தேசத்துரோக செயலாக கருதப்படும்.

முல்லைதீவு நீதிவான் குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கியமை வெள்ளவத்தை சிவன் கோவிலில் பிரித் பாராயணம் நடத்துவதற்கு கல்கிஸை நீதிவான் அனுமதி வழங்குவதற்கு சமனானதாகும். 

குறித்த நீதிவான், மனநோய்க்காக சிகிச்சை பெறும் ஒருவராவார். அத்தகைய ஒருவர் எப்படி நீதிவானாக செயற்பட முடியும்.

எனவே, அவரை உடனடியாக நீக்கி, தகுதியுள்ள ஒரு தமிழ் நீதிவானை அந்த இடத்துக்கு நியமிக்க வேண்டும்.

தொல்பொருள் கட்டளை சட்டத்தின் 31 (அ) பிரிவின் பிரகாரம், ஓர் இடம் பௌத்த மத சிதைவுகளை கொண்டிருப்பின், அந்த இடத்தில் பௌத்தர்களை ஆத்திரமூட்டும் வகையிலான செயல்களை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறானதொரு சட்டம் இருக்கையில் முல்லைதீவு நீதிவான் தமது உத்தரவின் மூலம் குறித்த சட்டத்தை வெளிப்படையாகவே மீறியுள்ளார்.

எனவே, தொலைநோக்கு இன்றி வழங்கப்படும் உத்தரவுகள் வீணான இனக்கலவரங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  வடக்கு, கிழக்கில் தொல்பொருட்களை தேடுவதற்கு பதிலாக பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இல்லாத விடயங்களை கூறி, இவரை போன்றவர்களே இனவாதங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.

52 சதவீதமான தமிழர்கள் வசிக்கும் தென்னிலங்கையில் இவ்வாறான இனவாதங்கள் ஏற்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.