பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் மேன்மைக்குரிய விக்டோரியா அட்கின்ஸ், பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில்  கோலாகலமான பொங்கல் கொண்டாட்டத்தை இன்று (19) நடத்தியுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

பிரதமரின் அதிகாரபூர்வ இல்ல  நுழைவாயில் பாரம்பரிய கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, மேலும் தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானை மற்றும் கரும்பு என்பனவும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் கல்வியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உட்பட பிரித்தானிய  தமிழ் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  உயர்ஸ்தானிகர்கள், குறிப்பாக இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் துரைசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் சமூகத்தை வரவேற்று உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ், உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகள் குறித்து பாராட்டினார். 

அத்துடன், தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் தமிழரின் நிலையை பற்றி உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவையும் வலியுறுத்தினார். 

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார், இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரது உரையை தொடர்ந்து  திருமதி உஷா ராகவனின் மாணவிகளின்  பாரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றமை கொண்டாட்டத்திற்கு ஒரு கலாசார மெருகை ஏற்றியது.

தோசை, இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் உணவு பதார்த்தங்கள் மேலைத்தேய கானப்பே வடிவில் பரிமாறப்பட்டதை விருந்தினர்கள் ருசித்து மகிழ்ந்தனர்.