ரயில் கட்டுப்பாளர்களும் பணிப்புறகைகணிப்பு - அலுவலக ரயில்கள் பல இரத்து!

ரயில் கட்டுப்பாளர்களும் பணிப்புறகைகணிப்பு - அலுவலக ரயில்கள் பல இரத்து!

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று பல அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டன.

எவ்வாறாயினும், கோட்டையிலிருந்து நீர்கொழும்பு மற்றும் வெயங்கொடைக்கு தலா இரண்டு ரயில்களும், பொல்கஹவெலயிலிருந்து கோட்டைக்கு இரண்டு ரயில்களும், காலியிலிருந்து கோட்டைக்கு மூன்று ரயில்களும், அளுத்கமவிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயிலும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ரயில் பயணச்சீட்டுகளை பெற்ற பயணிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிப்பதற்காக பயன்படுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு சட்டவிரோதமானது எனவும், ரயில் சேவைகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிக்கு சமுகமளிக்காதவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ரயில் கட்டுப்பாட்டாளர்களின் ஒன்றியமும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் திஷான படபண்டிகே தெரிவித்தார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.