மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல் ஓமானுக்கு வரவும் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் என இலங்கையர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல் ஓமானுக்கு வரவும் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சு மற்றும் அந்த நாட்டு காவல்துறையின் குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து அங்கு சிக்கியிருந்த 32 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளன.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று (29) அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்ததுடன் பின்னர் சரியான வேலைவாய்ப்பைப் பெறாமல், விசா காலம் முடிந்த பின்னரும் ஓமானில் தங்கியிருந்த நிலையிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது

அந்த வகையில்  கடந்த நவம்பர் மாதம் முதல் இன்று வரை ஓமான் நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் அங்கு சிக்கியிருந்த 400க்கும் மேற்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளதாக இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது

இந்தநிலையில், ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் எனவும், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இன்றி வருகை அல்லது சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வர வேண்டாம் எனவும் அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, அனைத்து இலங்கையர்களையும் உரிமம் பெற்ற முகவர்கள் ஊடாக மாத்திரம் தொழில்களை தேடுமாறும் ஓமானுக்கு வருவதற்கு முன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், தங்களை பதிவு செய்யுமாறும் ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் கோரியுள்ளது.