மட்டக்களப்பில் மீண்டும் மழை - தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பில் மீண்டும் மழை - தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று (19) அதிகாலை வேளையிலிருந்து மீண்டும் பலத்த மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் இன்று அதிகாலையிலிருந்து மழை பெய்யத் ஆரம்பித்துள்ளதால் மீண்டும் வெள்ளநிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் மழைநீர் தேக்கமடைந்து வழிந்தோட முடியாமல் உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில் மழையுடன் ஓரளவு காற்றும் வீசுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள குளங்களின் நீர்மட்டங்களின் நிலைமை தொடர்பிலும் பொறியியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

அந்த வகையில் இன்று காலை (19) வரையில், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 31அடி 3அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 13அடி 9அங்குலமும்,  வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 18அடி 10அங்குலமும், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 6அங்குலமும், கித்துள்வெவக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 3அங்குலம், நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 29அடி 6அங்குலம், தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க உன்னிச்சைப் பகுதியில் 3.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 17 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 26.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 12 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 24 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.