நாடு முழுவதும் சைவ ஆலயங்கள் மக்கள் ஆதரவுடன்தான் கட்டப்பட்டுள்ளன - எதிர்ப்புக்கு மத்தியில் அல்ல

25 மாவட்டங்களிலும் இந்து ஆலயங்கள் கட்டப்பட்டுள்ள பொழுது பெளத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்டுவதற்கு எதற்கு தடை

நாடு முழுவதும் சைவ ஆலயங்கள் மக்கள் ஆதரவுடன்தான் கட்டப்பட்டுள்ளன - எதிர்ப்புக்கு மத்தியில் அல்ல
surenthiran

 25 மாவட்டங்களிலும் இந்து ஆலயங்கள் கட்டப்பட்டுள்ள பொழுது பெளத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்டுவதற்கு எதற்கு தடை என்று கேள்வி எழுப்பி உள்ளனர் இனவாத மதவாத மும்மூர்த்திகள் என ரெலோ பேச்சாளர்(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கு. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் சைவ ஆலயங்கள் அங்குள்ள பக்தர்களால் மக்கள் ஆதரவுடன் உரிய அனுமதி பெற்று சட்டபூர்வமாக நாட்டு விதிமுறைகளை அனுசரித்து கட்டப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன.  
பொது மக்களின் காணிகளை அபகரித்தோ அல்லது தொல்லியலின் ஆதரவுடன் அரசு படைகளின் பாதுகாப்புடன் கட்டப்பட்டவை அல்ல.  பௌத்தத்திக்கோ பௌத்த மதத்திற்கோ புத்த பெருமானுக்கோ எதிரானவர்கள் அல்ல தமிழர்கள். மாறாக அவருடைய போதனைகளையும் மதிப்பவர்கள் தமிழ் மக்கள். இனவாத,மதவாத சக்திகள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

 பலாத்காரமாக மக்கள் காணிகளை அபகரித்து பிரதேச மக்களின் எதிர்ப்புக்கும் போராட்டத்திற்கும் மத்தியில் சட்ட விரோதமாக பெளத்த விகாரைகள் அமைக்கின்ற நோக்கமே தவறானது.  அந்த நோக்கத்தை தான் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். தொல்லியல் என்ற போர்வையில் பெளத்த விகாரைகளை கட்டி எழுப்பி விட்டு  மக்கள் காணிகளையும் அபகரித்து நீங்கள் செய்ய முற்படுவது என்ன? 
 

நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்படும் பட்சத்தில் எங்கெங்கு பெளத்த விகாரைகள் கட்டப்பட வேண்டும் என்பதை அங்கு வாழுகின்ற மக்களே தீர்மானிப்பார்கள். நீங்கள் பலாத்காரமாக  பெளத்த விகாரைகளை கட்ட வேண்டிய தேவை ஏற்படாது. 

தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தாது இனவாத மதவாதங்களை வளர்த்துக்கொண்டு அந்த நோக்கங்களை நிறைவேற்ற விகாரைகளைக் கட்ட தமிழ் மக்கள் அனுமதிக்கவில்லை என்பதால் நீங்கள் கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லை. உங்கள் மறைமுக ஆக்கிரமிப்பு நோக்கத்தை  நிறைவேற்ற தமிழ் மக்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க போவதில்லை.  

சிங்கள மக்களும் அதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை.  உங்களைப் போன்ற ஒரு சிலர் நாட்டின் அமைதியை குலைத்து தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டி விடுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு ஒரு பொழுதும் நாட்டு மக்கள் இடமளிக்கப் போவதில் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. 

அறகலைப் போராட்டத்தில் இருந்து நீங்கள் பெற்ற பாடங்களில்  இருந்து நீங்கள் திருந்தவில்லை.  விரைவில் நீங்கள் திருந்தும் காலம் வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.