வவுனியாவில் ஆசிரியை ஒருவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவுகள்!

வவுனியாவில் ஆசிரியை ஒருவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவுகள்!

வவுனியாவில் காசோலை மோசடி வழக்கில் ஆசிரியை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் 37 இலட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் குறித்த ஆசிரியையின் அரச தொழிலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் 5 வருட கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு 6 காசோலைகளை வழங்கிய மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஆசிரியை ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் அரச செலவாக 50 ஆயிரம் ரூபாவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 37 இலட்சம் ரூபாவும் செலுத்த தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 2006 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டமை மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அரச சட்டவாதி ஆறுமுகம் தனுசன் வழக்கு தொடுத்தவர் தரப்பில் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.

ஆசிரியை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 10 இலட்சம் ரூபாய் பணத்தை நீதிமன்றில் வைத்து வழங்கியுள்ளார்.

இதற்கிடையில்.3 மாத காலத்தில் மீதி தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பணம் செலுத்த தவறினால் உடனடியாக சிறைத்தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் 14 ஆண்டுகள் ஏமாற்றியது போதும் இனியும் பணம் செலுத்தாது ஏமாற்ற முடியாது என தெரிவித்து 3 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.