கைவிலங்கினால் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரிக்க முயற்சித்த சந்தேக நபர் சுட்டுக் கொலை!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்  ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்று இருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான வழக்குப் பொருட்களை கைப்பற்றுவதற்காக அவரை அழைத்துச் சென்றபோது சந்தேகநபருக்கு கைவிலங்கிடப்பட்டிருந்தது.

இதன்போதே பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை தனக்கு இடப்பட்டிருந்த கை விலங்கினால் நெரிக்க முயன்றுள்ளார்.   

இதனையடுத்து பலத்த காயமடைந்த  பொலிஸ் அதிகாரி அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை, மணிங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் தனஞ்சய என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்.