பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது!

பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது!

நாட்டில் இருவேறு பிரதேசங்களிலிருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - பூநகர் பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 கஜமுத்துக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை ஈச்சலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கொகரெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவர்களிடம் மேற்கொண்டு வருவதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் - களப்பு பகுதியில் 03 கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கஜமுத்துக்களை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாவது நபர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.