கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டு பணிகள் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டு பணிகள் இடைநிறுத்தம்!

பிரதேச மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 29 ஏக்கர் நிலப்பரப்பை அளவீடு செய்வதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.  

இந்த பணிகளுக்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு இன்று சென்றிருந்த போது, பிரதேச மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச்சென்றதாக அவர் குறிப்பிட்டார்.