சுழிபுரம் சவுக்கடி கடற்கரை புத்தர் சிலையினால் மீன்பிடிப்பு பாதிப்பு?

சுழிபுரம் சவுக்கடி கடற்கரை புத்தர் சிலையினால் மீன்பிடிப்பு பாதிப்பு?

யாழ்ப்பாணம் - சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் கடற்படையினரால் 10 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையினால் எதிர்காலத்தில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என மீன சமூகத்தினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்கரையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் காணி ஒன்றினுள் முகாமிட்டு நீண்டகாலமாக தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் பின்னே இயற்கையாக வளர்ந்த அரச மரம் ஒன்றின் கீழே இவ்வாறு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் தமது முகாமினுள் காணியை கொண்டிருக்கின்ற அதேவேளை, எதற்காக பொதுமக்கள் பகுதியில் குறித்த விகாரையை அமைக்க வேண்டும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த  புத்தர் சிலை அண்மையில் அமைக்கப்பட்டிருந்தாலும் மாதகல், சம்பில்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  விகாரையை அண்டிய பகுதிகளில் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளில் கடற்படையினர் தொடர்ந்து தலையீட்டை மேற்கொண்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த சிறிய புத்தர் சிலையுடனான வணக்கஸ்தலத்தை அகற்றுமாறு பிரதேசவாசிகள்  கோரியுள்ளனர்.

இதேவேளை, சிலை வைக்கப்பட்ட பொழுது மௌனமாக இருந்த அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக கருத்துக்களையும்,  போராட்டங்களையும் மேற்கொண்டு சமநிலையை குழப்பாது இதனை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.