செயலமர்வு தொடர்பாக அறிவிக்கசென்ற ஆசிரியர்மீது வாள்வெட்டு!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு தெரிவிப்பதற்க்காக அவரின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று மாலை (23) இடம்பெற்றுள்ளதாக அக்கபைரப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் இன்று (24) இடம்பெறவுள்ளதை அறிப்பதற்காக, அதிபரின் உத்தரவுக்கமைய நேற்று (23) மாலை , மாணவி ஒருவரின் வீட்டுக்கு குறித்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது வீட்டில் சத்தம் கேட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததையடுத்து, அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்த நிலையில் அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்டபோது, மாணவியின் சகோதரன் அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தாக்குதல் நடத்தியவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.