வட்டுக்கோட்டை சம்பவம் - சந்தேகத்திற்குரிய பொலிஸார் நால்வரும் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வட்டுக்கோட்டை சம்பவம் - சந்தேகத்திற்குரிய பொலிஸார் நால்வரும் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.

பொலிஸாரின் தாக்குதலில் குறித்த இளைஞர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், யாழ்ப்பாண குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் குறித்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோகர் ஒருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமைப் புரியும் 3 பொலிஸ்  உத்தியோகத்தர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் யாழ்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றுமொரு சந்தேகநபரால் அடையாளம் காட்டப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.