அதிக ஞாபகத்திறன் மூலம் திருகோணமலைச் சிறுமி  உலக சாதனை!

அதிக ஞாபகத்திறன் மூலம் திருகோணமலைச் சிறுமி  உலக சாதனை!

அதிக ஞாபகத்திறன் மூலம் திருகோணமலைச் சிறுமி சோழன் உலக சாதனை படைத்துள்ளார். 

பிரேம்ராஜ் மற்றும் வைதேகி தம்பதியரின் 3 வருடங்களும் 11 மாதங்களுமான மகள் தாரா, இவர் தவழும் பருவத்தில் இருந்தே அதிக ஞாபகத் திறனுடன் இருப்பதைக் கண்டறிந்த அவருடைய பெற்றோர் தொடர் பயிற்சியளித்தனர். 

அதன் பலனாக நேற்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் வைத்து 2 முதல் 7 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகள், தனிம வரிசை அட்டவணையின் 50 கூறுகள், மனித உடல்  உறுப்புகள் 6இன் உட்பாகங்கள் போன்றவற்றை கூறிய அதேவேளை 100  சமூக ஊடகங்களின் சின்னங்களையும் பிழையின்றி அடையாளம் காட்டினார். 

இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்து பரிசோதித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவர் எம்.தனராஜ், மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த. இன்பராசா, திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் சுயன்தன் விக்னேஷ்வரராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பொதுச் செயலாளர் சிவ வரதகரன் போன்றோர் சிறுமியின் முயற்சியை உலக சாதனையாக பதிவு செய்தனர்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுமி பிரேம் ராஜ் தாராவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம், அடையாள அட்டை மற்றும் ​கோப்புகள் போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்த இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநரின் பிரத்தியேக செயலாளர்  வி. ராஜசேகரன், நகராட்சி மன்றச் செயலாளர்  ஜெய விஷ்ணு, பொலிஸ் அதிகாரி ஜெய்ஸ், உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் தலைமை ஆசிரியர் மதன் துஷாந்தி, மாவட்ட இளைஞர் சேவைகள் அமைப்பின் தலைமை அலுவலர் யுவராஜ் குமார், பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் சார்பாக திருமதி.கோணேஸ்வரநாதன் தவமலர் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.

இந்தியாவில் இருந்து காணொளிக் காட்சியூடாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் உலக சாதனை படைத்த சிறுமி தாராவை வாழ்த்திப் பாராட்டினார்.