தொழிற்சங்க போராட்டத்தால் முடங்கியுள்ள மலையக பாடசாலைகள்!

தொழிற்சங்க போராட்டத்தால் முடங்கியுள்ள மலையக பாடசாலைகள்!

ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டினை நீக்க கோரி இன்று 26 ம் திகதி முன்னெடுத்த ஒன்றிணைந்த தொழிற்சங்க போராட்டத்தினால் முடங்கின மலையக பாடசாலைகள். 

 நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினையினை தீர்க்க கோரி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த போதிலும் அவர்களின் சம்பள பிரச்சினைக்கு முழுமையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இந் நிலையில் சுபோதனி  என்ற ஆணைக்குழு மூலம் ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கு சிபாரிசுகள் செய்யப்பட்டன எனினும் அதனையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை. 

அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டத்தின் குதித்தனர்.  தொடர்ந்து அப்போதய அரசாங்கம் சுபோதனி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கினை அதிகரித்தது. 

இந் நிலையில் எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பகுதியினையும்,கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியினை அதிகரிக்க கோரியும் கல்வியில் மாணவர்களதும் பெற்றோர்களது அழுத்தத்தினை நீக்கக்கோரியும் இன்று சுகயீன போராட்டத்தினை ஒன்றிணைந்து தொழிசங்க கூட்டமைப்பு அறிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் ஒழுங்கு செய்துள்ளது.

இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக நுவரெலியா மாட்டத்தில் உள்ள பிரதான பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியரகளும் மாணவர்களும் வருகை தரவில்லை இதனால் பாடசாலைகளின் படலைகள் மூடப்பட்டு இருந்தன.

ஒரு சில பாடசாலைக்களுக்கு மாணவர்கள் வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.நகரங்களில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இன்று வருகை தராமையினால் பெற்றோர்கள் வந்து தமது பிள்ளைகளை அழைத்து செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.

இதே நேரம் இன்று சுகயீன விடுமுறையினை தந்தி மூலம் அறிவிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தபால் நிலையத்தில் வரிசை நின்று கொண்டிருந்தனர்.

எது எவ்வாறான போதிலும் நாட்டின் எதிர்காலம் எதிர்கால சந்ததியினரிடம் தங்கியுள்ளதனாலும் தற்போது குறைந்த சம்பளம் காரணமாக அதிகமான ஆசிரியர்கள் இந்த துறையிலிருந்து விலகி வேறு துறைகளுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் பெரும்பாலானவர்கள் இந்த துறைக்கு வருவதற்கும் மறுப்பதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர் எனவே இது குறித்து நியாமான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும்.