வாகன இறக்குமதி குறித்த விசேட அறிவிப்பு - விலைகளில் மாற்றம்!

வாகன இறக்குமதி குறித்த விசேட அறிவிப்பு - விலைகளில் மாற்றம்!

ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைவாக, நோயாளர் காவு வாகனம், குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான தொழிற்சாலை வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவைகள் கருதி இந்த வாகனங்கள் அவ்வப்போது சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும், கார்கள், வான்கள், கெப் ரக வாகனங்கள் போன்ற தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை அடுத்த ஆண்டு (2025) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, முதலில் 1000cc க்கும் குறைவான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தாலும் தற்போதைய சந்தை விலையில் வாகனங்களை விற்க முடியாது என்றும், ஜப்பானில் 20 இலட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் காரை அனைத்து வரிகளுடன் குறைந்தது 60 இலட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான கால அவகாசம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும், வாகனங்களுக்கு 300 வீத வரி விதிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.