காற்று சுழற்சியும் : மழை வீழ்ச்சியும் - கிழக்கு மாகாணத்தில் கனமழை!

காற்று சுழற்சியும் : மழை வீழ்ச்சியும் - கிழக்கு மாகாணத்தில் கனமழை!

இலங்கைத் தீவின் தெற்காக நகர்கின்ற காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஓரளவு கனத்த மழையும், திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியும், அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இதே காலகட்டத்தில் இடையிடையே ஓரளவு மழையும் பெய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக இன்றுள்ள வானிலை அமைப்பின்படி கணிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தை பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடையிடையே ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.

வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை ஓரளவு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்வதற்கான சாத்திய கூறு இந்த காலப்பகுதியில் மிக குறைவாகவே உள்ளது.