அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக கல்விக்காக செல்லும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 40 வீதமாக மட்டுப்படுத்தப்படும் என்ற தகவலை கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் நிராகரித்துள்ளார்.

சமகால தொழிற்கட்சி அரசாங்கம் அவ்வாறான கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எதிர்காலத்தில் உயர்கல்வியின் தரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-2023ஆம் நிதியாண்டில் 528,000 ஆக இருந்த அவுஸ்திரேலியாவின் மொத்த குடியேற்றத்தின் எண்ணிக்கை 2024-2025 ஆம் ஆண்டில் 260,000 ஆக குறைக்கப்படும் என்று கடந்த மாதம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதற்கமைய, உயர்கல்விக்கு வரும் மாணவர்களுக்கு மாணவர் விசா கட்டணத்தை உயர்த்துதல், வங்கி இருப்பு தொகையை உயர்த்துதல், ஆங்கில மொழித் திறனை அதிக அளவில் பேணுதல் போன்ற பல கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

எனினும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் வலியுறுத்துகிறார்.

அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு வருமானத்தில் உயர்கல்வி நான்காவது இடத்தில் உள்ளதால், இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.