மலையக இரட்டையர்கள் “யாழில் இருந்து காலி வரை” சாதனைப் பயணம்!

மலையக இரட்டையர்கள் “யாழில் இருந்து காலி வரை” சாதனைப் பயணம்!
மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவுசெய்து சாதனை படைத்துள்ளனர்.

சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை, 32 மணித்தியாலங்களில், நடைபயணமாக கடந்து அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய, தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து தமது நடைபயணத்தை ஆரம்பித்த அவர்கள், இன்று பிற்பகல் 2.30 அளவில் காலிமுகத்திடலை அடைந்து, சாதனை படைத்துள்ளனர்.

பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், இந்தச் சாதனையை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கியுள்ளது.

தமது பயணத்தின் தொடர்ச்சியாக, காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவ்விருவரும் மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து சாதனை படைக்கவுள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீற்றர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் நடந்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோ மீற்றர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்தும் சாதனை படைத்திருந்தனர்.

மேலும், இந்த இரட்டையரில் தயாபரன் ஒரு நடனக்கலைஞர் என்பதும், அவர் தமிழகத்தின் பிரபல நடிகரான ராகவா லோரன்ஸிடம் நடனம் கற்றவர் என்பதும் சிறப்பம்சமாகும்.

அவர் முன்னதாக இலங்கையில் தொடர்ச்சியாக 10 நாட்கள் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.