சர்வதேச கால்நடைகள் தினத்தினை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரையில் விசேட நிகழ்வு!

சர்வதேச கால்நடைகள் தினத்தினை முன்னிட்டு  பாசிக்குடா கடற்கரையில் விசேட நிகழ்வு!

சர்வதேச கால்நடைகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அலுவலகமும் இணைந்து வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நடத்திய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.ஹாதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை அரச கால்நடை வைத்திய அதிகாரி என்.டியுலினா, ஓட்டமாவடி அரச கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.துசியந்தன், மண்டூர் அரச கால்நடை வைத்திய அதிகாரி ரி.டிசாந்தன், வாகரை அரச கால்நடை வைத்திய அதிகாரி சூரிய பன்டார, இலங்கை சுற்றுலா அதிகார சபையின் பாசிக்குடா சுற்றுலா விடுதி முகாமையாளர் எம்.மாஹீர், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பாசிக்குடா கடற்கரை பிரதேசங்களை அண்டி வாழும் நாய்களுக்கு சுற்றுலா பிரயாணிகளின் பாதுகாப்பு கருதி விசர்நாய் கடி தடுப்பு மருந்து ஏற்றுதல், கருத்தடை அறுவை சிகிச்சை என்பன இடம்பெற்றதுடன், மெடிக்கல் லங்கா கோல்டிவ் நிறுவனத்தினால் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்விற்கு வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் பாசிக்குடா சுற்றுலா அதிகார சபையின் அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.