வவுனியாவில் உடைப்பெடுத்த குளம்: 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு!

வவுனியா, ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளதுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறிய வண்ணமுள்ளது.

வவுனியாவில் உடைப்பெடுத்த குளம்: 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு!

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்த நிலையிலேயே இவ் குளம் இன்று (12) காலை உடைப்பெடுத்துள்ளது. 

ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைபெடுத்த பகுதியினை மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை.

கோமரசங்குளம் பகுதியிலுள்ள இந்த குளம் நீண்ட காலமாக எவ்வித புனரமைப்பு பணிகளும் இன்றி இருப்பதுடன், குளத்தின் கீழ் 35 ஏக்கர் வயல் நிலங்கள் உள்ள போதிலும் தற்போது 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த அனர்த்தம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கியமையுடன் குளத்திலிருந்து தொடர்ந்தும் நீர் வெளியேறி வருகின்றது.

வெளியேறும் நீரினை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.