லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

வட ஆபிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
 
லிபியாவின் தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அகதிகள் ஆணையகம் நேற்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, அந்த ஆணையகம் சார்பில் விடுதலை செய்யப்பட்ட அகதிகள் அனைவரின் பெயர்களையும் பதிவு செய்ப்பட்டு அவர்களுக்கு தேவையான போர்வைகள், ஆடைகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டு தற்காலிகள் தங்குமிடங்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், லிபியாவின்  சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அகதிகள் மற்றும் புகலிடம் தேடி அந்நாட்டிற்குள் தஞ்சமடைந்தவர்கள் ஆகியோரை விடுவிக்க அந்நாட்டு அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஐ.நா. ஆணையகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், நேற்று (11) லிபியாவின்  உட்துறை அமைச்சரகம் கூறுகையில் லிபியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய நைஜீரிய நாட்டு மக்கள் சிலரை அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
முன்னதாக, அந்நாட்டு உட்துறை அமைச்சரகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் லிபியா நாட்டினுள் சட்டவிரோதமாக சுமார் 30 லட்சம் பேர் குடியேறியுள்ளதாகவும், இதனால் அந்நாடு பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடயத்தில்  சர்வதேச சமூகம் உதவியளிக்கவில்லையென்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.