வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் இலங்கைக்கு  -  சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் இலங்கைக்கு  -  சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உடனடியாகப் பொறுப்புக்கூறல் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

'தெற்காசியப் பிராந்தியத்தில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களின் தடங்கள்' எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் தரவு அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் கறைபடிந்த வலிந்து காணாமலாக்கப்படல் வரலாறு மனித உரிமைகள் வலுவாகப் புறந்தள்ளப்படுவதைக் காண்பிக்கின்றது. அத்தோடு சுமார் 60,000 - 100,000 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருக்கும் இலங்கை, உலகிலேயே அதிக எண்ணிக்கையான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இலங்கை அரசாங்கமானது பல தசாப்தகாலமாக தீவிரவாதத்தைத் தோற்கடித்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்' என்ற போர்வையில் அரச பயங்கரவாதத்தை பிரயோகிப்பதற்கான ஆயுதமாக வலிந்து காணாமலாக்குவதைப் பயன்படுத்திவந்திருக்கின்றது.

1970 மற்றும் 1980 களில் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்படல்கள், தமிழ் இளைஞர்கள் அரச படையினரால் கடத்தப்படல் போன்ற சம்பவங்கள் மூலம் உள்நாட்டு ஆயுதப்போராட்டத்தின்போது மேலும் தீவிரமடைந்தது. 

இருப்பினும் 2009 இல் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதுடன் இவ்வலிந்து காணாமலாக்கப்படல்களும் இடைநிறுத்தப்பட்டன. ஆனால் போருக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையின சமூகங்களை இலக்குவைத்து அரச அனுசரணையுடன்கூடிய 'வெள்ளை வான் கடத்தல்கள்' எனும் புதிய பாகம் ஆரம்பமானது. 

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மத்தியில் மிக ஆழமான துயரமும், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற பதில் தெரியாத கேள்வியும், தொடர் விரக்தியும் நிலைகொண்டிருக்கின்றது. உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான அவர்களது தொடர் போராட்டம் அரச ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றது.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், அரசாங்கம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களை ஸ்தாபித்திருக்கின்றதே தவிர, அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகள் மிகவும் மந்தகரமான நிலையிலேயே உள்ளன. 

அதன்படி இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது உடனடியாக பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டிய விடயமாக இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.