பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல - மனோ, கம்மன்பில, இந்திய தூதர் மத்தியில் கலாநிதி வல்பொல தேரோ!

பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமானது.

பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார்கள். 

அதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும் என கொழும்பு பாமன்கடை ஸ்ரீ மகாவிஹாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், உதய கம்மன்பில, இந்திய தூதர் கோபால் பாகலே ஆகியோர் முன்னிலையில், பெருந்தொகையான விகாரை பக்தர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரரின் 80 அகவை நிறைவை ஸ்ரீ மகாவிஹாரை பக்தர்களின் நிறைவேற்று சபையும், பெருந்தொகையான விகாராதிபதிகளும் இணைந்து பெளத்த தத்துவ நிகழ்வாக கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில்  விசேட அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வண. வல்பொல பியனந்த தேரர் மேலும் கூறியதாவது;   

கணிசமான பண்டைய தமிழ் சங்க கால அங்கத்தவர்கள் இவ்வுலகில் பெளத்தத்துக்கு பெரும் பங்களிப்புகள் வழங்கி உள்ளார்கள். 

முதலாவது, வண. புத்தகோஷ மகா தேரர் மற்றும் வண. அனுருத்த மகா தேரர் ஆகியோர் அபிதர்ம காவியத்தை எழுதினார்கள்.

அமெரிக்காவிலும், ஆனந்த குமாரசுவாமி அவர்களே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெளத்த கல்வியை, 1930 களில் போதிக்க ஆரம்பித்தார்.

ஆகவே பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது உலகத்துக்கு சொந்தமானது. 

பண்டைய காலங்களில் தமிழ் சங்ககால அங்கத்தவர்களே பெளத்தத்தை வளர்த்து எடுத்தார்கள். 

இதை நாம் பெருமையுடன் கூறி வைக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.