ஜிகர்தண்டாவை பார்க்க ஆசைப்பட்ட பழம்பெரும் ஹொலிவூட் நடிகர் : உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

ஜிகர்தண்டாவை பார்க்க ஆசைப்பட்ட  பழம்பெரும் ஹொலிவூட் நடிகர் : உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகியிருக்கிறது.

திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜப்பான் படத்தின் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களின் வசூல் அதிகரித்தன.

உலகளவில் இப்படம் 70 கோடி இந்திய ரூபாய் வரை வசூலித்தது. தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சீசரான ராகவா லாரன்ஸ், இயக்குநரான எஸ்.ஜே.சூர்யாவிடம் பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனக்குக் கொடுத்ததாகக் கூறி துப்பாக்கி தோற்றத்தில் இருக்கும் பழைய பிலிம் கேமரா ஒன்றை கொடுக்கிறார். 

இதைக் கூறும் பிளாஷ்பேக் காட்சியில் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டே நடித்தது போல் வி.எஃப்.எக்ஸ் செய்திருந்தனர்.

இந்தநிலையில், ரசிகர் ஒருவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கைக் குறிப்பிட்டு, “இந்தியாவிலிருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற தமிழ் படத்தை எடுத்திருக்கிறோம். 

நெட்பிளிக்ஸில் இருக்கிறது. படம் முழுக்க உங்கள் பங்களிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

அனிமேஷன் காட்சிகளில் உங்களின் இளம் வயதைக் காட்டியிருக்கிறோம். வாய்ப்பு 

கிடைக்கும் போது கண்டிப்பாக இப்படத்தைப் பாருங்கள்” எனக் கூறியிருந்தார். 

தற்போது, அந்த கணக்கிலிருந்து பதில் வந்துள்ளது. அதில், “ஹாய். கிளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார். 

இப்போது, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பணிகள் முடிந்ததும் அந்தப் படத்தை (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) பார்ப்பார். நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “வாவ். நம்பமுடியவில்லை.

படத்தைப் பார்த்துவிட்டு ஈஸ்ட்வுட் கூறும் கருத்துகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. 

நான் ஆசிர்வதிக்கப்பட்டவான உணர்கிறேன். 

இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி ” என உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

93 வயதாகும் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் கௌபாய் நாயகனாக நடித்து உலகளவில் புகழ்பெற்றவர்.

தி மேன் வித் நோ நேம் (the man with no name), ஏ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டொலர்ஸ் ( A Fistful of Dollars ), தி குட், தி பேட் அன்ட் தி அக்லி ( The Good, the Bad and the Ugly) ஆகியவை இவர் நடிப்பில் வெளிவந்த மிகச்சிறந்த படங்கள் ஆகும்.