அரச வைத்தியசாலைகளே ஏழைகளுக்கு புகலிடம் - தனியார் மருத்துவ மாஃபியா ஒன்று செயற்படுகிறது! 

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அருண் சித்தார்த் அரச வைத்தியசாலைகள்தான் ஏழைகளுக்கு இருக்கின்ற ஒரே புகலிடம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளே ஏழைகளுக்கு புகலிடம் - தனியார் மருத்துவ மாஃபியா ஒன்று செயற்படுகிறது! 

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
“சில தினங்களுக்கு முன்பு யாழ். போதனா வைத்தியசாலையில் தவறான சிகிச்சையினால் தனது கரத்தை இழந்த சிறுமையான வைஷாலி தொடர்பான சர்ச்சை சமூகத்தில் மேலெழுந்த வண்ணம் உள்ளது. 

இதுகுறித்து சமூக கரிசனை உள்ள ஒரு குழுவாக நாம் ஆராய்ந்து பார்க்கின்ற போது இதற்கு பின்னணியில் என்ன இருக்கின்றது என்பது குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

முக்கியமாக இந்த சிறுமி இரண்டு தனியார் வைத்தியசாலைகளுக்கு முதலில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

அதற்குப் பின்பு தான் இவர் யாழ் போதனை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றார், முக்கியமாக அந்த இரண்டு வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியசாலை குறித்து பல காலமாகவே குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 

தவறான வைத்தியங்கள், தவறான செயற்பாடுகள் காரணமாக அவர்களுக்கு நீதிமன்ற வழக்குகள் கூட இருப்பதாக அறிகின்றோம். 

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சிறுமியின் பெற்றோருடைய துயரம் குறித்து நாங்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.

அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அத்தோடு இதற்குப் பின்புலத்தில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பான சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றது.

ஆனால் எமக்கு கிடைத்த தகவல்கள் ஊடாக பார்க்கின்ற போது இந்த சம்பவத்தை வைத்து மருத்துவம் முழுமையாக வியாபாரம் ஆக்கப்படுகின்ற சதி அல்லது ஒரு வலைப்பின்னல் ஒன்று உருவாகும் சூழலொன்றை நாங்கள் காண்கின்றோம். 

சாதாரண எளிய மக்கள் சிறப்பான வைத்தியம் பெறக்கூடிய வைத்தியசாலைகள் மீது பாரிய சந்தேகத்தை மக்கள் மத்தியில் பரப்பி அதனூடாக இந்த மக்களை தனியார் வைத்தியசாலைக்கு காசு செலவழித்து சிகிச்சைப் பெற வைக்கின்ற ஒரு செயற்பாடு இதன் பின்னணியில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்திய வைத்தியசாலைகள் இங்கு கால் பதிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதாவது பல லட்சங்கள் கட்டி மருந்துகளை எடுக்க வேண்டிய ஒரு சூழல் இதற்கு பின்னால் இருக்கின்றது.

ஒரு மருத்துவ மாஃபியா ஒன்று இயங்குவதாக தகவல்கள் உள்ளன. நாங்கள் இது குறித்து மேலதிக தகவல்களை பெற முயற்சிக்கிறோம்.

இந்த விடயம் தற்போது நீதிமன்றத்திற்கு போய் இருக்கின்றது. கடைசியாக எங்களுடைய சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் அத்தோடு அரச வைத்தியசாலைகள் தான் எமக்கு இருக்கின்ற ஒரே புகலிடம்.

இந்த அரச வைத்தியசாலைகளின் தரம், அதனுடைய சிறந்த செயற்பாடுகள் இவை அனைத்தும் வழமை போன்று இருக்க வேண்டும். 

அரச வைத்தியசாலைகள் குறித்த பலவிதமான குற்றசாட்டுகள் இருக்கின்றன. ஆனால் குற்றச்சாட்டுக்கள் ஊடாக மக்களை தனியார் வைத்தியசாலைகளை நோக்கி தள்ளும் ஒரு  வியாபார சூழ்ச்சியா இது என்றும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.