சுகாதார ஊழியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு - பேச்சுவார்த்தை தோல்வி

முன்னதாக திட்டமிட்டபடி, நாளை (18) காலை 07.00 மணி முதல் 24 மணி நேரம் பணிப்புறக்கணிப்பு நடத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளன.
மேலும், நோயாளர்களின் நலன் கருதி அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளின் போது சுகாதார ஊழியர்கள் கடமையில் ஈடுபட தயாராக உள்ளனர்.
இதேவேளை சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட விசேட தேவையுடைய வைத்தியசாலைகளில் எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.