பௌத்த மதகுருக்களால் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைப்பு - மட்டக்களப்பு எல்லையில் சம்பவம்! (காணொளி & குரல்பதிவு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு மயிலத்தமடு, மாதவனைப் பகுதிக்கு இன்றையதினம் (22) சென்ற சர்வமத தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அங்கிருந்த பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு சுற்றி வளைத்து அங்கிருந்து வெளியேற முடியாதவாறு தடுத்து வைத்துள்ளதாக அங்கு சிக்கியுள்ள ஊடகவியலாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.

பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காகவே இவர்களின் களவிஜயம் அமைந்திருந்தது.

இந்தக் குழு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்ததன் பின்னர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும் போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தியவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இணைந்து அவர்கள் அனைவரையும் செல்லும் வழியில் மறித்து சிறைபிடித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய சக ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்ள் அனைவரும், மாவட்ட பொலிஸார், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்த நிலைமை தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இன்று மாலை 4 மணி வரையிலும் அந்த குழுவினரை குறித்த பௌத்த மதகுரு மற்றும் ஏனையோர் விடுவிக்காமல் தடுத்து வைத்திருந்தனர்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஒருவரின் குரல்பதிவை செய்யுடன் இணைத்துள்ளோம்...!

Files