3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (10) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலகப் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, நிவித்திகல, குருவிட்ட, ஓபநாயக்க, எலபாத, கலவான, இம்புல்பே, எஹெலியகொட மற்றும் கிரியெல்ல ஆகிய 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.