லோகேஷ் கனகராஜ் சிறிதுகாலம் ஓய்வு - வலைத்தளங்களில் சஞ்சரிப்பதில்லை!

பிரபல தமிழக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதள பக்கத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்ளவள்ளதாக அறிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் சிறிதுகாலம் ஓய்வு - வலைத்தளங்களில் சஞ்சரிப்பதில்லை!

லியோ திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.  

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மற்றொரு புறம் ரஜினி நடிக்கும் 170-வது படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

இப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமூக வலைதள பக்கத்திலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

எனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.