ஏனிந்த அவசரம், - விமல்_சொக்கநாதன்?

விமல் சொக்கநாதனின் மறைவு என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கொழும்பில் நிகழ்ந்த விமலின் நூல் வெளியீட்டில் அதிதியாக கலந்துக்கொண்ட நினைவுகள் நெஞ்சில் மிதக்கின்றன. 

விமல் ஒரு பன்முக ஆளுமை.

தமிழ் ஒலிபரப்பு உலகில் ஒரு முன்னணியாளராக இருந்தவர்.

 பல நிகழ்ச்சிகளை தயாரித்தும், அதில் பங்கேற்றும் தனது குரல் வளத்தின் மூலம் அதற்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தவர்.

எமது தந்தை வீ.பி. கணேசன் அவர்களின் "புதிய காற்று" திரைப்படத்திலும் பங்கேற்று நடிப்பு துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். 

(ஆகஸ்ட் 02 என் தந்தை 1996ல் வீபிஜி மறைந்த திகதி)

தனது தொழில்சார் சட்டத்தரணி பணிக்காக லண்டன் சென்ற பிறகும், அவருக்கு வானொலி மீதிருந்த அளப்பரிய பற்று குறையவில்லை. பிபிசி தமிழோசையில் அவர் செய்தி வாசிப்பாளராக பல தசாப்தங்கள் பணியாற்றினார். 

தனது குரலின் ஏற்ற இறக்கங்கள், உச்சரிப்பு, மொழிபெயர்ப்பில் எளிமையான நடை ஆகியவை மூலம் அவரது ஆளுமை மேலும் விரிவடைந்து பிரமலமானார். 

ஐ பி சி ஊடக நிறுவனத்திலும் பாரிய பங்களிப்பை விமல் செய்திருந்தார்.

எழுத்துலகிலும் காலடி பதித்திருந்த அவர் வீரகேசரி இதழிற்கு வாரம் ஒரு கட்டுரையை எழுதி வந்தார்.

 அந்த கட்டுரைகளின் தொகுப்பு “லண்டனிலிருந்து விமல்” என்ற தலைப்பில் அண்மையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் வெளியானது. 

கொழும்பு வெளியீட்டில் பிரதம அதிதியாக பங்கேற்று அந்நூல் குறித்து பேசியது எனது மனதில் இன்றளவும் பசுமையாக உள்ளது.

அவரது உடல் நிலையில் தளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும், உள்ளத்தளவில் உற்சாகத்தில் சிறிதும் குறைவில்லாமல் இருப்பதை அந்நூல் வெளியீட்டு விழாவில் நான் அவதானித்தேன். 

இன்றைய இளைய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும், தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் உள்ளார் என்பது மறுக்க முடியாதது.

ரயில் விபத்தில் அவர் அகால மரணமடைந்தது என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

எம்மிடையே குடும்ப ரீதியாக நல்லுறவும் இருந்தது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் நேயர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அவருக்கு எனது அஞ்சலியையும் செலுத்துகிறேன்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்