பொதுஜன பெரமுன  ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை - பெசில் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுன  ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை - பெசில் ராஜபக்ஷ

தமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த பெசில் ராஜபக்ஷ, ஒவ்வொரு தேர்தலும் சவாலாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சி மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை எனவும், மக்கள் சொல்வதைச் செய்வதாகவும், சில இடங்களில் தவறு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை எனவும் சில சந்தர்ப்பங்களில் மக்கள் சொல்வதையும் தாம் ஏற்கவில்லை எனவும் அவற்றை திருத்திக் கொண்டு பயணிக்க விரும்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாடு திரும்பிய பெசில் ராஜபக்ஷவை வரவேற்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுனவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் விமான நிலையத்துக்கு சென்றிருந்ததாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.