தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல் - ஆறு பேருக்கும் விளக்கமறியல்!

திருகோணமலை-சர்தாபுர பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல் - ஆறு பேருக்கும் விளக்கமறியல்!

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18) குறித்த சந்தேக நபர்களை ஆஜர் படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் கொண்டு செல்லப்பட்ட போது சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த குறித்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும், 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மீது ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிய வருகின்றத

இதனிடையே, திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (18) முன்னெடுக்கப்பட்டிருந்தது

தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் தேவிபுரம், வள்ளிபுனம் கிராம மக்கள் முதன்மை வீதியில் ஒன்று கூடி கையில் பதாகைகளை தாங்கியவாறு, மக்கள் எதிர்ப்பு கோஷங்களை வெளிப்படுத்தி வள்ளிபுனம் சந்தி வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தியது மாத்திரமல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என்றும் சர்வதேச விசாரணை வேண்டுமென வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

திருகோணமலை தமிழரின் தலைநகர் தியாகி திலீபன் அகிம்சையின் அடையாளம், தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இறந்தவர்களை வழிபடத் தடைதானா?, போராடுவோம் போராடுவோம்!! தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவோம், ஐ.நா சபையே? தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? வடக்கு கிழக்கு தமிழரின் தாயக பூமி நிறுத்து நிறுத்து! அடாவடியை நிறுத்து போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.