முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு மார்ச் 28 ம் திகதி விளக்கத்துக்காக நியமிப்பு!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு மார்ச் 28 ம் திகதி விளக்கத்துக்காக நியமிப்பு!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் கடந்த 20.04.2019 அன்று கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வருகின்றது.

கடந்த 04.05.2023 அன்று  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது  வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவிக்கப்படட நிலையில் குறித்த கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 2023-09-21 ம் திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது

இந்தநிலையில் 2023-09-21 அன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.

அன்றும் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளர் வருகைதரவில்லை. இந்நிலையில் குறித்த கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிபதிக்கு தெரிவித்தனர்.

அந்தவகையில், குறித்த கடற்படை புலனாய்வாளர் மற்றும் அவரது சாட்சி ஆகிய இருவருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு 2024.02.29ம் திகதிக்கு தவணையிடப்பட்டது.

நேற்று குறித்த வழக்கானது  முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஊடகவியலாளர்  சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த கடற்படை புலனாய்வாளரும் வருகைதந்திருந்தார்.  ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு விளக்கத்துக்காக மார்ச் 28 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்.இதன் போது செல்வபுரம் பேரூந்து நிலையத்தில் ஒளித்திருந்து  ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும்,  ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை  அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என வினவியபோது, அதற்கு தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது.குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவியபோது, அவர் தங்களுடைய நபர் என கடற்படையினர் தெரிவித்ததுடன், அவரை குறித்த இடத்தில் வருகை தந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் அன்று மாலை முல்லைத்தீவு காவல்நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்  

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான சண்முகம் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.