மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 8500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1748 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.