மத்திய கிழக்கில் நிலைகொள்ளவுள்ள அமெரிக்க இராணுவ விமானங்கள்: ஆரம்பமான புதிய போர்!

மத்திய கிழக்கில் நிலைகொள்ளவுள்ள அமெரிக்க இராணுவ விமானங்கள்: ஆரம்பமான புதிய போர்!

தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சநிலைக்கு மத்தியில் அமெரிக்க இராணுவம் கூடுதல் ஜெட் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பவுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான், யேமன் மற்றும் ஜோர்தான் உட்பட, மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் மீது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், அமெரிக்கா குறித்த நகர்வை மேற்கொண்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லாஹ் கமாண்டர் ஃபுவாட் ஷுகர் (Fuad Shukr) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக ஹிஸ்புல்லாஹ் (Hezbollah) தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் (Hassan Nasrallah) இஸ்ரேலுக்கு எதிரான தனது எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷுகரைக் கொன்றதன் மூலம் ஒரு புதிய போர் ஆரம்பமாகியுள்ளது என ஹசன் கூறியமை சர்வதேசத்தை அச்சநிலைக்கு தள்ளியுள்ளது .

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர், '' தமது நாடு எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது'' என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தது.

ஈரானின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.