ஜெனிற்றாவின் கைது கண்டனத்திற்குரியது - பிரித்தானிய பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர் சாடல்!

ஜெனிற்றாவின் கைது கண்டனத்திற்குரியது - பிரித்தானிய பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர் சாடல்!

பிரித்தானியா அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் சிரேஷ்ட உறுப்பினரும் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சிவோன் மக்டோனா நேற்றைய தினம் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிற் கேமரூனுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிற்றாவின் கைது பற்றி அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், குறித்த கைது நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் எனவும் அமைதியாக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டார்.

ஜெனிற்றா அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் வடக்குக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதியை சந்தித்து தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் வினவ முற்பட்ட போதே ஜெனிட்டா கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், போரின் இறுதிக் காலத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். 

மேலும் ஐக்கிய நாடுகளின் சபையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணை குழு தமது 2020 அறிக்கையில் இலங்கை காணாமல் ஆக்கப்படுவோரின் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிப்பதாக சுட்டி காட்டினார்.

பாதிக்கப்பட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை வன்மையாக தான் கண்டிப்பதாக கூறிய சிவோன் மக்டோனா, வெளிவிவகார அமைச்சர் டேவிற் கேமரோன் அவர்களை கண்டனத்தை தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்வதுடன் பிரித்தானியா ஒரு தூதுவரை அந்த வழக்கு விசாரணைக்கு நிதிமன்றுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டார்.