ஈழவேந்தன் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்

ஈழவேந்தன் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்

தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக் குரல் ஓய்ந்துவிட்டது. தமிழீழ விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்து விட்டது.

திரு.கனகசபாபதி கனகேந்திரன் “ஈழவேந்தன்”அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர் அசாத்தியமான குணவியல்புகளை கொண்டவர். இனிமையான பேச்சும்,எளிமையான பண்பும்,பெருந்தன்மையான போக்கும் அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதர்.தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலை சிறந்த தமிழறிஞர்,நிறைந்த அறிவு படைத்தவர்,அனைவரையும் கவர்ந்த ஒரு தேசப்பற்றாளர்.இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு
 சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். தமிழீழ மக்கள் அடக்குமுறைக்குள் இருந்து விடுதலைபெற்று சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதையே வாழ்வின் இலட்சியமாக வரித்துக்கொண்டவர். இந்த இலட்சியத்தால் உந்தப்பெற்று தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றவர்.காலந்தோறும் சர்வதேச அரங்கில் எமது போராட்ட நியாயங்களை எடுத்துக் கூறி வந்தவர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தார். பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பற்பல அச்சுறுத்தல்களையும் ஆபத்துக்களையும் கொடிய சிறைக் கம்பிகளுக்கு மத்தியில் மிகுந்த துணிவுடன் எதிர்கொண்டார். சிங்கள பாராளுமன்றில் ஓயாது உரிமைக்குரல் எழுப்பினார். இவரது பாராளுமன்ற உறுபினர் உரிமை பறிபோனது.தொடர்ந்து சிங்கள அரச பயங்கரவாதம் இவரை கொல்லத் திட்மிட்டிருந்த வேளையில் தாய் நாட்டை பிரிந்து சென்றார்.

2009 இனவழிப்பை தொடர்ந்து சர்வதேச அரங்கில் தமிழீழ விடுதலைக்கு சாவின் இறுதிக்கணம் வரை அவராற்றிய ஆழமான பணிகள் மூலம் வரலாற்றில் நிலைத்துவிட்டார்.
அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. என்றுமே பாராட்டுக்குரியவை.

திரு.கனகசபாபதி கனகேந்திரன் “ஈழவேந்தன்”அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து  அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு  எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.