24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் - சஜித் பிரேமதாச

அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, கற்றோர் நிறைந்த புத்திஜீவிகள் சமூகத்தை எமது உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இதற்கு எமது நாட்டில் 24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும். 

இலங்கையில் ஏற்கனவே திறந்த பல்கலைக்கழகங்கள் அமைந்து காணப்படுகின்றன. இதில் ஒரு மாணவராக, திறந்த சமுதாய பல்கலைக்கழகங்களை மாவட்ட மட்டங்களில் நிறுவி, உயர் கல்விக்கான பிரவேசத்தை அதிகரிக்க வேண்டும் என கருதுகிறேன். 

இதன் காரணமாக கற்றறிந்த புத்திஜீவிகள் சமூகத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். படித்த புத்திஜீவிகளும் அறிஞர்களும் நிபுணத்துவம் வாய்நர்தவர்களும் அதிகளவில் உருவாகுவார்கள். 

இதன் மூலம் பலரும் உயர்கல்விக்கான வாய்ப்பைப் பெறுவதுடன், உயர் கல்வித் தகைமை, திறமைகளுடன், கூடிய சம்பளம் பெறும் வேலைக்குச் செல்லக்கூடிய தலைமுறை உருவாகும். 

இதனால் வாழ்நாள் முழுவதுமான கற்றல் செயல்முறைக்கு ஊக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த சமுதாய திறந்த பல்கலைக்கழக எண்ணக்கரு நகர்ப்புற மற்றும் கிராமப்புற அபிவிருத்திக்கு உதவும் காரணியாக அமைந்து காணப்படும். 

இதன் மூலம்,  புதிய பட்டப்படிப்புகள், புதிய கற்றல் விருப்பார்வங்கள் சகலருக்கும் கிட்டும். இங்கு சமூக பங்கேற்பு கற்றல் அதிகரிக்கும். ஸ்மார்ட் தொழிலை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும். 

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் திறந்த சமுதாய பல்கலைக்கழகம் என்ற எண்ணக்கருவை அரச மற்றும் தனியார் கூட்டாண்மை ஊடாக ஆரம்பித்து, சமூகத்தில் படித்தவர்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கும் பாரிய கல்வி அபிவிருத்தித் திட்டத்திற்கு வழிவகுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சமுதாய திறந்த பல்கலைக்கழகங்களால், நாட்டின் மாணவர்களினதும் இளைஞர்களினதும்  உயர் கல்விக்கான ஆர்வத்தையும் பிரவேசத்தையும் உந்துதலையும் அதிகரிக்கும். 

இதன் மூலம் உயர் திறன்களைக் கொண்ட தொழிலாளர் படையை உருவாக்கலாம். வயது மூப்பானவர்களும், வயது வித்தியாசமின்றி கல்வியில் பட்டம் பெற வழிவகை பிறக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் மூலம், சிறந்த பணியாளர்கள் உருவாகுவார்கள். உயர் கல்வியறிவு மட்டத்தை எம்மால் அடைய முடியுமாக இருக்கும். இவ்வாறான நிலை உருவாகும் போது, எந்த அரசியல்வாதியாலும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாத நிலை ஏற்படும்.

நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு நாட்டின் சட்டவாக்க நடைமுறைகள் ஏற்பாடுகள் குறித்த புரிதல் இல்லாததால், உயர் வர்க்கத்தினர் சொல்வதை அவ்வாறே நம்பி ஏமாந்து போகும் அடிமை கலாசாரம் காணப்படுகிறது. இதில் இருந்து விடுபட வேண்டும். நாட்டின் உயர் வர்க்கத்தினரை விட மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ளும் தலைமுறையை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 351 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன, கண்டி, உடுநுவர, தவுல்கல, வெலிகல்ல உடு அலுதெனிய மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 21 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

???? ஆங்கிலம், சீனம் மற்றும் ஹிந்தி மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலம், சீனம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மொழிகளும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருந்து வருகிறோம். இந்த இரண்டு நாடுகளும் உலகின் மிகப்பெரிய தொழிலாளர் சந்தையை தன்னகத்தே கொண்டுள்ளன. 

எனவே, நாம் இந்த தொழிலாளர் சந்தையை இலக்கு வைத்து செயற்பட வேண்டும். எனவே எமக்கு மொழித் தேர்ச்சி தேவைப்படுகிறது. எதிர்கால நோக்குடனே இவை அனைத்தும் முன்னெடுக்கப்பட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் இனங்கள், மதங்கள் குறித்து பேசி தத்தமது சொந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தரப்பினரும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ஆனால் 41 இலட்சம் மாணவ தலைமுறை குறித்து நாம் நேர்மையாக சிந்தித்துப் பார்ப்போமேயானால் சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் போதும் என்று கூறிக்கொண்டு இருப்பதை விடுத்து, ஆங்கில மொழிக் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் உண்மையான தேசப்பற்று என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பொறியியல், மருத்துவம், சட்டம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை விடுத்து, குறிப்பாக கலைத் துறையினர் அனைத்துப் பட்டப்படிப்ப பரீட்ச்சைகளிலும் தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கின்றனர். வேலை கேட்டு வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

புறக்கோட்டையிலும் லிப்டன் சுற்றுவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எமது நாட்டில் இவ்வாறு நடந்து வந்தாலும், உலகின் பல நாடுகளில் திறமையான பட்டதாரிகளை கண்டறிந்து பல்கலைகழகத்தின் இறுதி வருடத்தில் அவர்களுக்கு வேலை வழங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வருகின்றன. எனவே கல்வி முறையில் தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

https://youtu.be/MsEntesBU7Q?si=2sgrzahqV0Ldd5hI