அவசர தடுப்பூசி இறக்குமதி மூலம் 36 கோடி 89 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நாட்டுக்கு நஷ்டம்!

அவசர தடுப்பூசி இறக்குமதி மூலம் 36 கோடி 89 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நாட்டுக்கு நஷ்டம்!

பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மெராெபெனம் தடுப்பூசி போதுமானளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் அவரச கொள்முதல் முறையின் மூலம் 4 இலட்சித்தி 50ஆயிரம் தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்டது.

இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மெராெபெனம் தடுப்பூசி  488,590  கையிருப்பில் இருப்பதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில்  அவசர கொள்முதல் முறையின் மூலம் 450,000 தடுப்பூசி குப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டுக்கு 36 கோடி 89 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு குப்பி 1075.68 ரூபாவுக்கு கிடைத்தும், 1895.50 ரூபாவுக்கு இதை கொள்வனவு செய்துள்ளனர் .

தேவையான அளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் ஏன் அவசர கொள்முதல் செய்யப்பட்டது என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். இதனால் நாடு நட்டத்தை சந்தித்துள்ளது. எனவே இந்த அவசர கொள்முதல் தொடர்பாக முறையான அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளிக்க வேண்டும். 

அத்துடன் இந்த தடுப்பூசி விநியோகஸ்தர் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையத்திடம் இருந்து பதிவுச் சான்றிதழைப் பெற்று, குறுகிய காலத்துக்குள்  அவசர கொள்முதல் மூலம் இந்த மோசடியை செய்திருப்பதால், இது தொடர்பாக அறிக்கையொன்றினை சபையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.