வீதியில் நெல் உலர்த்தியவர் வாகனம் மோதி உயிரிழப்பு!

வீதியில் நெல் உலர்த்தியவர் வாகனம் மோதி உயிரிழப்பு!

வீதியில் நெல் உலர்த்துவதற்காக, நெல்லை பரப்பிக்கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாண வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் கச்சாய்- புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் வீதியில் இன்று (11) காலை நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மேல் மோதி விபத்துக்குள்ளானது.

பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்தார்.

காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை. அதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பில் பரித்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.