வடக்கு மாகாண சனசமூக நிலைய பிரதிநிதிகள் ஆளுநருடன் விசேட சந்திப்பு!

வடக்கு மாகாண சனசமூக நிலைய பிரதிநிதிகள் ஆளுநருடன் விசேட சந்திப்பு!

வடக்கு மாகாணத்திலுள்ள சனசமூக நிலைய பிரதிநிதிகளை ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் நேற்று (29) அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லூரியில் சந்தித்து கலந்துரையாடினார்.

குறிப்பாக சமூக நிலையிலிருந்து தற்போது மக்கள் மாறிவரும் போக்கு காணப்படுகிறது. எனவே மக்களை மீண்டும் சமூகமயமாக்கும் நோக்கத்தில் குறித்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தாமே இனங்கண்டு அதனை ஏற்றுக் கொண்டு அவற்றை சமூகமாக இணைந்து தீர்வு காணும் வகையில் செயற்படுவதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார்.

மக்கள் தற்போது பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில பிரச்சினைகளுக்கு தாமே தீர்வினை பெற்றுக் கொள்ளும் வகையில் முன்வந்துள்ளனர்.

அத்துடன்  வழி தவறி போகின்ற இளைஞர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்துவதும் சமூகத்தின் பொறுப்பு என்றும், அது தொடர்பிலும் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது கேட்டுக் கொண்டார்.

பொதுமக்கள் அரச ஊழியர்களை தேடிச் செல்லும் நிலையில் அரச ஊழியர்கள் பொது மக்களைத் தேடிவரும் வகையிலான வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடு வரவேற்கத்தக்கது என கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

ஆளுநர் ஒருவர் கிராமத்திற்கு வருகைதந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலே சிலவற்றிற்கு உடனடி தீர்வுகளை வழங்கியும் ஏனையவை தொடர்பிலே கரிசனை செலுத்துவதும் முதல் தடவையாக இடம்பெறுவதாகவும் இதற்கு பொதுமக்களாகிய தாமும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் கிராம மக்களால் 15 வகையான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள்  சிலவற்றுக்கு தீர்வுகளும் ஆளுநரால்  முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஆளுநரின் குறித்த சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.