பொன் அணிகளின் போர் - சமநிலையில் நிறைவுற்றது!

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும்  வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான 107வது துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது.

107ஆவது பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டி நேற்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் களத்தெடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கல்லூரி அனைத்து இலக்குகளையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணி சார்பில் ஜோன்சன் 63 ஒட்டங்களை அதிகபட்சமாக  பெற்றுக் கொண்டார்.

புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் செகான், அபிலாஷ் தலா 3 இலக்குகளை வீழ்த்தினார்கள்.

பதிலுக்கு தனது முதலாம் தரப்பு ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி சகல இலக்குகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில் மதுசன் 39 ஒட்டங்களை அதிகபட்சமாக  பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் யாழ்ப்பாண கல்லூரி வீரர் விஷ்னுகோபன் 6 இலக்குகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு இரண்டாம் தரப்பு ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 7 இலக்குகளை இழந்து 93 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

அணி சார்பில் விஷ்னுகோபன் 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் சாருசன் 5 இலக்குகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு இரண்டாம் தரப்பு ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி 13 பந்துவீச்சு முறைகளில் 5 இலக்குகளை இழந்து 25 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

இதனடிப்படையில் 107வது பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் விஷ்னுகோபன் தெரிவானார்.