சிறுமியை நஞ்சூட்டி கொன்றதாக வாக்குமூலம் - திருநெல்வேலி சிறுமி மரணத்தில் திருப்பம்!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி தனது பாட்டியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தரை பொலிஸார் இன்று () நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

சிறுமி திருகோணமலையில் தனது தந்தையுடன் வளர்ந்துள்ளார். வயோதிப பெண் மற்றும் சிறுமி இருவரும், கடந்த 9ஆம் திகதி அந்த விடுதிக்கு வந்துள்ளனர். 

சிறுமிக்கு உளச்சிக்கல்கள் உள்ளதாகவும், அதற்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற வந்ததாகவும் விடுதியில் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் அவர் வெளியில் சென்று வந்தார். அதன் பின்னர் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளிவராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸார் விடுதி அறையின் கதவை உடைத்த போது சிறுமி உயிரிழந்த நிலையிலும் வயோதிப பெண் மயக்கமுற்ற நிலையிலும் இருந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பாட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை கோப்பாய் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது விடுதியில் கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தை அடிப்படையில் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.