புலிகளின் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில்  டக்ளஸ் தேவானந்தா கவனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட மேலாடையை அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில்  டக்ளஸ் தேவானந்தா கவனம்!

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் நேற்று [01] அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு  நிலைமைகளை எடுத்துக்கூறினார்.

இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி சில அரசியல் தரப்புக்களினால் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாமம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற அந்த பிரதேசத்தினை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன் [23] என்ற இளைஞன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட மேலாடையை [ரீசேர்ட்] அணிந்திருந்தார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.