நெடுந்தீவில் நெடுவூர்த் திருவிழா ஆகஸ்ட் 4 ஆரம்பம்!

நெடுந்தீவில் நெடுவூர்த் திருவிழா ஆகஸ்ட் 4 ஆரம்பம்!

உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நெடுவூர்த் திருவிழாவின் ஏற்பாட்டாளரும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கிருபாகரன் தர்மலிங்கம் இதனை தெரிவித்தார்.

கடந்து போன இனப்போரினாலும் பொருளியல் போரினாலும் சிதறுண்டு போனோரெல்லாம் உலகின் பல பாகங்களிலும் வெளி மாவட்டங்களிலும் பரந்து வாழும் இச்சூழலில் எமது தாய்மண் உறவுகள் ஒன்றிணைந்து கடந்த கால வாழ்வியலை மகிழ்வோடு மீட்டுப் பார்க்கும் அழகிய தருணமாக இந்த நெடுவூர்த் திருவிழா அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். 

இவ்விழாவில் பல்துறை சார்ந்த நிகழ்வுகளை உறவுகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு நாம் எண்ணியுள்ளோம். 

இதன்மூலம் நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினது வாழ்வியலையும் மேம்படுத்துவதே எமது நோக்கம் என்றார்.