முருகன்,ஜெயக்குமார்,ரொபட் பயஸுக்கு ஆகியோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

முருகன்,ஜெயக்குமார்,ரொபட் பயஸுக்கு ஆகியோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, முருகனின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, “முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்க பட்டு விட்டது.

 மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசிற்கு  நேற்று கடிதமொன்றை எழுதி அனுப்பியிருந்தார்,மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.” என்று கூறினார். இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.